Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 3, 2013

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்



லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்:
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.
'ரமளானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.' (அறிவிப்பவர்: அபூஸலமா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).
மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூ று தடவை ஓதி தொழும் தொழுகை, என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
'அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)என்று கற்றுக் கொடுத்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)
பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)
'அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் அடையாளம் தெரியாத நபர் யாரோ சொன்ன 'அதிமேதாவித்தனமான' விளக்கத்தை வைத்துக்கொண்டு, ரமளானின் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் குறட்டை விடுவதும் சரியானதா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.
'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)
'நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்'. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.
'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.' (அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.
பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
'நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி)
'இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
மேற்குறிப்பிட்ட இறைமறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்தும் பள்ளியில் தங்கி இருக்கும்போது அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
லைலத்துல் கத்ர் இரவும், முஸ்லிம்களில் பெரும்பாலோரின் நடைமுறையும்
தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது போன்றவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தராத, நாமே உருவாக்கிக் கொண்ட நூதனங்கள் (பித்அத்) ஆகும். இதுபோன்ற நூதனங்களை தவிர்ப்போம்.
Engr.Sulthan

மகத்தான நற்பாக்கியங்கள்!

மகத்தான நற்பாக்கியங்கள்!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை அழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.
 நன்றி சுவனத்தென்றல்
Engr.Sulthan